Homeஉடல் நலம்கோடையில் முதியோர் கடைப்பிடிக்க வேண்டியவை!

கோடையில் முதியோர் கடைப்பிடிக்க வேண்டியவை!

இனி எதிர்வரும் மாதங்களில் கோடைக்காலத்தின் வெப்பம் அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எனவே கொளுத்தும் வெயிலையும், ஏற்படும் எண்ணற்ற நோய்களையும் சமாளிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதியோர்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, தோல் வறட்சி, அதிகரித்த இதயத்துடிப்பு முதலியவை ஏற்படலாம்.

இவை உடலில் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, பக்கவாதத்தை கொண்டு வரலாம். இதை உடனடி மருத்துவ சிகிச்சை மூலம் எளிதில் நிர்வகிக்க முடியும், என்றாலும் தவிர்ப்பதே நல்லது.

இயன்றவரை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத நேர ங்களில் வெளியேசெல்ல வேண்டியிருந்தால், குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கும்போது, தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் மென்மையான தோலில் ஊடுருவக்கூடும்.

இதனால், உடல் அரிப்பு வறண்ட மற்றும் சிவப்பு தோல் ஆகியவை ஏற்படலாம். எனவே, உடல் தோல் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

வியர்க்குரு பெரியவர்களை மிகவும் பாதிக்கும் என்பதால், வியர்வையுடன் கூடிய ஆடைகளை அடிக்கடி மாற்றுவதும், இருமுறை குளிப்பதுவும் நல்லது.

அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்று வலி போன்றவை உண்டாகலாம்.

READ ALSO: சிகரெட் பழக்கத்தை நிறுத்துவது நல்லதா? 

வீட்டில் சமைத்த உணவை மட்டுமே அளவுடன் உட்கொள்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிட நேரிட்டால், சுகாதாரமான இடங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

கூடுமானவரை எண்ணெய் மற்றும் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். கோடைக்கால நோய்களில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றான சின்னம்மை, பொதுவாக சிறு குழந்தைகளையும்,

சில நேரங்களில் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்களையும் பாதிக்கலாம். எச்சரிக்கை தேவை.

மஞ்சள் காமாலை நோய், காலரா, டைபாய்டு போன்ற கோடை நோய்களை உண்டாக்கும் நுண்கிருமிகள் வாய்வழி வழியாக உடலுக்குள் சென்று உடலில் அந்த நோய்களை ஏற்படுத்தலாம்.

மஞ்சள் காமாலையின் முக்கிய அறிகுறிகள் மஞ்சள் நிற தோல், வெளிறிய கண்கள், கருமையான சிறுநீர், தோல் அரிப்பு போன்றவை.

அன்றாட உடற்பயிற்சி ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவும்.

முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தமாக கழுவுவது, சருமத்தை எண்ணெய்ப்பசை இல்லாமல் வைத்திருப்பது வெப்பக் கட்டிகள் வருவதை தடுக்கும்.

கண்கள் வீங்கி சிவந்து வலியை ஏற்படுத்துவதை கண் நோய் இருப்பதற்கான அடையாளமாக கருதலாம்.

இது தொற்று நோயாதலால், ஒருவருக்கு வந்தால், வீட்டில் அனைவருக்கும் வரலாம். கண்களை தொடுவதற்கு முன்பு கைகளை கழுவுவது அவசியம்.

பாதிக்கப்பட்ட கண்களை குளிர்ந்த நீரில் ஒரு நாளைக்கு பல முறை கழுவுவதும், மருத்துவ சிகிச்சையும் நல்ல பலனைத் தரும்.

READ ALSO: முதுமையில் எய்ட்ஸ் வருவது உண்மையா?

நீர்க்கடுப்பு ஏற்படுவதை தடுக்க நிறைய தண்ணீரையும், இளநீர், எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளுவதும் நல்லது.

அதிகப்படியான வியர்வை வெளிவருவதால், உடலில் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க நீர் மோரில் உப்பு சேர்த்து அருந்துவது நல்லது.

மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள்வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால், அவற்றைத் தவிர்த்து, வெண்மையான பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.

முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், வயதின் காரணமாகவும் அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும்.

ஆனால், ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை நீரை பருக வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடையவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் நீர் அருந்த வேண்டும்.

அதிக நார்ச்சத்துகள் அதிகம் கொண்ட கொய்யப்பழம், தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு பசி உணர்வு குறைந்து காணப்படும்.

எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

காற்றோட்டமான அறையில் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் ஆழ்ந்து உறங்குவதால் உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

கட்டுரையாளர்

முனைவர் என்.பத்ரி, கல்வியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read