Homeநிதி நலம்கலால் தினம் பற்றி அறிவோமா?

கலால் தினம் பற்றி அறிவோமா?

கலால் வரி ஏன்? எதற்கு? எப்படி?

மத்திய கலால் தினம் – 24 பிப்ரவரி 

கலால் என்றால் என்ன?

‘கல்லல்’ என்பது கச்சாப் பொருளிலிருந்து, விற்பனைக்கு உகந்த பொருளைக் ‘கல்லி எடுத்தல்’ அல்லது ‘கல்லுதல்’ அல்லது ‘உருவாக்கல்’. இவ்வாறு ‘கல்லிய பொருளை’, ‘கல்லிய இடத்திலிருந்து எடுத்துச் செல்ல’ அரசாங்கம் விதிக்கும் வரியே ‘கலால் வரி’.

ஓர் உதாரணம்: ஏதேதோ மூலப்பொருட்களிலிருந்து மதுபான ஆலையில் ‘கல்லி’ எடுக்கப்படுகிறது. இது பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசுக்கு ‘கலால் வரி’ செலுத்த வேண்டும். இது பெட்ரோலுக்கும் பொருந்தும்.

கலால் வரி சட்டம்

நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் உற்பத்தியின் மீது விதிக்கப்படுவதுதான் கலால் வரி (excise duty). பிப்ரவரி 24, 1944 ஆம் ஆண்டில் மத்திய கலால் மற்றும் உப்பு வரி சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1966-ம் ஆண்டில் ‘மத்திய கலால் வரி சட்டம்’ என பெயர் மாற்றப்பட்டது. பொதுவாக தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் அதன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும்போது, அந்த பொருளின் தயாரிப்பாளரால் கலால் வரி செலுத்தப்படும். 

இந்தியாவில் அடிப்படை கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி என மூன்று வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்படுகின்றன. விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்களைத் தவிர அனைத்துப் பொருட்களுக்கும் கலால் வரி வசூலிக்கப்படும். 

கலால் வரி தினம் – ஏன் இந்த தினம்?

கலால் வரிகள், போக்குவரத்து வரிகள் மற்றும் பல வரிகள் இந்திய அரசின் வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மத்திய கலால் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உணர்த்தும் வகையில்தான் கலால் வரி தினம் அனுசரிக்கப்படுகிறது. 1944-ம் ஆண்டு முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகளின் அளவு வளர்ந்தன.

கலால் வரி தினமானது நம் நாட்டுக்கு செலுத்தக்கூடிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய (CBIC) துறையின் பங்களிப்பையும், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் சேவைகளையும் கவுரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அதே போன்று இதில் பணிபுரியும் ஊழியர்களை அதிக நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யவும் ஊக்குவிக்கிறது. 

உப்பிலே தொடங்கியது!

மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே உப்பு என்பது ஒரு முக்கியமான பொருளாக இருந்து வருகிறது. பொதுவாக உப்பு வரி வசூலிப்பதற்கான நிர்வாகக் கட்டுப்பாடு விஷயங்களில் சீரான தன்மை இல்லை. முந்தைய இந்திய மாநிலங்கள் மற்றும் பல மாகாணங்கள் அவற்றின் சொந்த நிர்வாக அமைப்பை கொண்டிருந்தன. மேலும் அவை வரி வசூல் முறையையும் வைத்திருந்தன.

1944-ம் ஆண்டு வரியை எளிதாகச் செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் இந்திய வரி முறை சீர்திருத்தப்பட்டது. மத்திய கலால் வரி மற்றும் உப்புச் சட்டம் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பு விதிகளைக் கொண்டு இந்த சட்டத்தை திருத்தியது. 1890-ம் ஆண்டின் பம்பாய் உப்புச் சட்டம், 1884-ம் ஆண்டின் மெட்ராஸ் உப்புச் சட்டம் மற்றும்1882-ம் ஆண்டின் இந்திய உப்புச் சட்டம் போன்ற உப்பு உற்பத்திச் சட்டங்களும், போக்குவரத்து தொடர்பான அனைத்து முந்தைய சட்டங்களும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டன.

சுங்க வரியும் கலால் வரியும்

நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரிதான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும். சுங்க வரிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சுங்க வரி என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருளை நம் நாட்டுக்குள் கொண்டு வருவதற்காகச் செலுத்த வேண்டியது. 

கலால் கடமைகள்

சுங்க வரி மற்றும் வரி வசூல் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், மத்திய கலால் வரிகள், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஐஜிஎஸ்டி, கடத்தல் தடுப்பு ஆகியவை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கடமைகளாக உள்ளன. இதன் முக்கியத்துவத்தை இந்திய நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதும், அவர்களின் பணிகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதும்தான் கலால் வரி நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read